ADDED : செப் 12, 2024 05:45 AM

பொதுவாக நீர் வீழ்ச்சி என்றாலே, சுற்றுலா பயணியருக்கு குஷியோ குஷி. சுற்றுலா தலத்துக்கு செல்லும் போது, நீர் வீழ்ச்சியை தேடுவது சகஜம். குறிப்பாக மழைக்காலத்தில் இத்தகைய இடங்களுக்கு விரும்பி செல்வர்.
நீர் வீழ்ச்சிகளின் நீரை அருந்துவதில்லை. குளித்தும், நீச்சலடித்தும் குஷி அடைவார். ஆனால் சிக்கமகளூரின் நீர் வீழ்ச்சியின் நீரை அருந்த போட்டி போடுவர். இந்த நீர், அமிர்தத்துக்கு சமமானது என்பது, சுற்றுலா பயணியரின் கருத்தாகும்.
சிக்கமகளூரின், தத்த பீடத்துக்கு செல்லும் பாதையில் ஹொன்னம்மன ஹள்ளா நீர்வீழ்ச்சி உள்ளது. மழை துவங்கினால் போதும்; சுற்றுலா பயணியர் இங்கு குவிகின்றனர். பாட்டில்களில் நீரை நிரப்பி குடிக்கின்றனர். வீட்டுக்கும் கொண்டு செல்கின்றனர்.
இதற்கு காரணம், நீரில் கலந்துள்ள அற்புதமான மருத்துவ குணம். ஹொன்னம்மன ஹள்ளா நீர் வீழ்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி எல்லைக்கு உட்பட்டது.
ஏராளமான மூலிகை செடி, கொடிகள், வேர்களை கடந்து வருகிறது. எனவே, இந்த நீரில் மருத்துவ குணம் கலந்துள்ளது.
இதை அருந்தினால் இருமல், சளி, காய்ச்சல் எலும்பு சம்பந்தப்பட்ட நோயாக இருந்தாலும், குணமாவதாக மக்கள் நம்புகின்றனர். நீர் வீழ்ச்சியில் குளிப்பதால் சரும நோயும் குணமாகிறது.
சுற்றுலா பயணியர் ஜாலியாக பொழுது போக்க, தகுதியானதாகும். வார இறுதி நாட்களில் நண்பர்கள், காதலர்கள் அதிகமாக வருகின்றனர். குடும்பம், குடும்பமாகவும் வருகின்றனர். தற்போது மழை பெய்வதால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஹொன்னம்மன ஹள்ளா நீர் வீழ்ச்சிக்கு வருவதற்கு பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. தனியார் வாகன வசதியும் உண்டு.
சொந்த வாகனங்கள் உள்ளவர்கள் மாலை வரை, மருத்துவ குணம் கலந்துள்ள நீரில் விளையாடிவிட்டு, புத்துணர்ச்சியுடன் திரும்பி செல்லலாம் - நமது நிருபர் -.

