ADDED : மே 05, 2024 12:11 AM
திருச்சூர் - :கேரளாவில் தனியார் பஸ்சில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், கண்டக்டரால் எட்டி உதைக்கப்பட்ட பயணி ரோட்டில் விழுந்து இறந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவலுார் அருகே உள்ள எட்டு மனைமுடிச்சூரை சேர்ந்தவர் பவித்ரன் 68.
மின் கட்டணம் செலுத்துவதற்காக தனியார் பஸ்சில் பயணம் செய்த இவர், 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் கட்டணம் 13 ரூபாய் என கண்டக்டர் ரதீஷ் கூறியுள்ளார்.
அப்போது பவித்ரன் தன்னிடம் சில்லறை இல்லை என்றும், 500 ரூபாயாகத் தான் இருக்கிறது என்றும் கூறி, அதை கொடுத்துஉள்ளார்.
அதைப்பெற்றுக் கொண்ட கண்டக்டர் ரதீஷ், மீதி சில்லறை கொடுத்தபோது அதில் குறைவாக இருந்ததாக பவித்ரன் கூறவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையில் பவித்ரன் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தமும் தாண்டிய நிலையில், இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த கண்டக்டர் ரதீஷ், பவித்ரனை காலால் எட்டி உதைத்ததில் அவர் பஸ்சில் இருந்து ரோட்டில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.