தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் அரங்கேறிய ஆபத்தான பயணம்
தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் அரங்கேறிய ஆபத்தான பயணம்
ADDED : ஜூன் 15, 2024 07:12 AM

மூணாறு : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக கார் ஓட்டிய சம்பவம் மீண்டும் அரங்கேறியது.
மூணாறு அருகே பைசன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ரிதுகிருஷ்ணன். இவர், ஜூன் 2ல் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு எஸ்டேட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தாக கார் ஓட்டினார். காரில் இருந்த அவரது நண்பர்கள் உடலை வெளியில் காட்டி ஆட்டம் போட்டனர். அச்சம்பவத்தில் நிதுகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் ஓராண்டுக்கு ரத்து செய்து ஜூன் 10ல் உத்தரவிட்டனர். அவரது காரின் பதிவும் ரத்து செய்யப்பட்டது.ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து நான்கு நாட்களில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு எஸ்டேட் பகுதியில் அதே பாணியில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியது. பத்தனம்திட்டா பகுதி பதிவு எண் கொண்ட காரில் ஒருவர் ஆபத்தை உணராமல் கதவு வழியாக உடல் வெளியில் தெரியும்படி நின்றவாறு அலைபேசியில் போட்டோ எடுத்த வண்ணம் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால் காரில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மோட்டார் வாகனதுறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அது குறித்து விசாரணை நடக்கிறது.