குற்றவாளியை கைது செய்வதற்காக எய்ம்ஸ் வார்டுக்குள் வந்த போலீஸ் ஜீப்
குற்றவாளியை கைது செய்வதற்காக எய்ம்ஸ் வார்டுக்குள் வந்த போலீஸ் ஜீப்
ADDED : மே 24, 2024 12:48 AM

ரிஷிகேஷ், பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்த நர்சிங் ஊழியரை கைது செய்வதற்காக, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டுக்கே நேராக போலீசார் ஜீப்பை ஓட்டி வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு நர்சிங் ஊழியராக பணிபுரிபவர் சதீஷ் குமார்.
இவர் சமீபத்தில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து, பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.
தகவல் அறிந்த சக டாக்டர்கள், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, ரிஷிகேஷ் போலீசில், சதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரை பணி நீக்கம் செய்து டீன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னும் சதீஷ் குமாருக்கு அவசர சிகிச்சை வார்டில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த போலீசார், அவரை கைது செய்ய மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர் வார்டில் இருப்பதை அறிந்து நேராக ஜீப்பை வார்டு வரை ஓட்டிச் சென்று, அங்கு வைத்து அவரை கைது செய்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு பக்கமும் நோயாளிகள் படுத்திருக்க, நடுவில் ஜீப் வந்ததை பார்த்து, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்; நோயாளிகளும் பதறியடித்து எழுந்தனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து, மருத்துவமனைக்குள் ஜீப்பை ஓட்டி வந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்தி உள்ளனர்.