அரசு நிலத்தில் மசூதியை இடிக்க வலியுறுத்தி திடீர் போராட்டம்
அரசு நிலத்தில் மசூதியை இடிக்க வலியுறுத்தி திடீர் போராட்டம்
UPDATED : செப் 14, 2024 02:45 AM
ADDED : செப் 14, 2024 02:14 AM

மண்டி ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லாவை அடுத்து மண்டியிலும், மசூதியை இடிக்க வலியுறுத்தி ஹிந்து அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு சிம்லாவின் சஞ்சவ்லி பகுதியில் உள்ள மசூதி, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அதை இடிக்கக் கோரியும், ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நோட்டீஸ்
கடந்த 11ம் தேதி நடந்த போராட்டத்தை போலீசார் தடுக்க முயன்றபோது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பதற்றம் ஓய்வதற்குள், மண்டி நகரில் அமைந்துள்ள மசூதி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதை இடிக்க வலியுறுத்தி ஹிந்து அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டியில் ஜெயில் ரோடு பகுதியில் அமைந்துள்ள மசூதியை கட்ட 45 ச.மீ., மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 232 ச.மீ.,க்கு கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
அடுத்த 30 நாட்களுக்கு அதை இடிக்க உத்தரவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இதையடுத்து, மசூதியின் ஒரு பகுதியை அதன் நிர்வாகத்தினரே நேற்று முன்தினம் இடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு ஹிந்து அமைப்பினர் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடிக்க வலியுறுத்தி மண்டி மார்க்கெட் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலோசனை
சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர், திடீரென மசூதியை முற்றுகையிடும் விதமாக பேரணியாக புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பியபடி தடுப்புகளை தாண்டி அவர்கள் முன்னேறி சென்றனர்.
இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் கலைத்தனர். இதையடுத்து, கும்பல் கலைந்து சென்றது.
இதற்கிடையே, ஹிமாச்சலில் நடந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் சுக்விந்தர் சுகு நேற்று ஆலோசனை நடத்தினார்.
நடவடிக்கை
பின் முதல்வர் சுக்விந்தர் சுகு கூறியதாவது:
ஹிமாச்சல பிரதேச அரசு அனைத்து மதங்களையும் மதிக்கிறது. நாம் எதிர்ப்பு ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால், அந்த எதிர்ப்பு அமைதியாக இருக்க வேண்டும்.
ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வேண்டாம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளை முஸ்லிம் மக்களே இடிக்க முன்வந்துள்ளனர்.
மாநிலத்தில் அமைதியும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். எந்த ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆகையால், சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.