சிங்கப்பூரில் ஆணழகன் போட்டி காய்கறி விற்ற வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
சிங்கப்பூரில் ஆணழகன் போட்டி காய்கறி விற்ற வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
ADDED : மே 11, 2024 09:49 PM

மைசூரு நகரில் காய்கறிகள் விற்பனை செய்து வந்த 22 வயது வாலிபர், சிங்கப்பூரில் நடந்த ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மைசூரு மாவட்டம், சரகூருவின் சாகரே கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ். 25. இவர், தினமும் தன் கிராமத்தில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உள்ள அரவிந்தா நகர் சி.ஆர்., பிட்னஸ் சென்டரில் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை உடற்பயிற்சி மேற்கொள்வார்.
ஆணழகன் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்து கொள்வதற்காக, உடற்பயிற்சியில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்த பயிற்சியாளர் சந்தன், ஆணழகன் போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்தார்.
இதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்து வந்தார்.
அதன் பின், நள்ளிரவு வரை நகரில் உள்ள ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் நள்ளிரவு வரை காய்கறிகளை வாகனங்களில் ஏற்றுவார். அதன் பின், அதே வாகனத்தில் எச்.டி.கோட்டே சென்று, வாகனத்திலேயே உறங்குவார். காலையில் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிடுவார்.
இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளாக தினமும் 65 கி.மீ., பயணம் செய்து உடற்பயிற்சியில் ஆர்வமுடன் இருந்தார்.
பிட்னஸ் இன்டர்நேஷனல் பெடரேஷன் சார்பில் சிங்கப்பூரில் ஆணழகன் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற தன்ராஜ், வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்தார்.
சிங்கப்பூரில் நடந்த ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கத்துடன் தன்ராஜ் - வலது. (அடுத்த படம்) தன்ராஜ்
.
- நமது சிறப்பு நிருபர் -
***