தேர்தல் பிரசார திட்டத்தை அறிய முயற்சி அமலாக்க துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தேர்தல் பிரசார திட்டத்தை அறிய முயற்சி அமலாக்க துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : மார் 29, 2024 09:52 PM

புதுடில்லி,:“பா.ஜ.,வின் அரசியல் ஆயுதமாக செயல்படும் அமலாக்க துறை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மொபைல் போன்களில் இருந்து, ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் பிரசார திட்டங்களை அறிய முயற்சி செய்கிறது,” என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கடந்த 21ம் தேதி இரவு கைதுச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மொபைல் போன்களை ஆய்வு செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை, நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
ஆனால், உண்மையிலேயே கெஜ்ரிவால் மொபைல் போன்களில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புவது அமலாக்கத் துறை அல்ல; பா.ஜ.,தான் விரும்புகிறது.
பா.ஜ.,வின் அரசியல் ஆயுதமாக செயல்படும் அமலாக்கத் துறை பா.ஜ.,வின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் மதுபானக் கொள்கை 2021- - 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இப்போது பயன்படுத்தும் மொபைல் போன்கள் சில மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டவை.
அவரது புதிய மொபைல் போன்களில் 'பாஸ்வேர்டு' வேண்டும் என அமலாக்கத் துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.
அந்த மொபைல் போன்கள் வாயிலாக ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் வியூகம், பிரசாரத் திட்டங்கள், இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை பா.ஜ.,வுக்கு வழங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

