கோவில் சொத்து விபரம் இணையதளத்தில் பதிவிட பீஹாரில் அதிரடி ஏற்பாடு
கோவில் சொத்து விபரம் இணையதளத்தில் பதிவிட பீஹாரில் அதிரடி ஏற்பாடு
ADDED : ஆக 09, 2024 12:20 AM

பாட்னா: இதுவரை முறையாக பதிவு செய்யாத கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தொடர்பான தகவல்களையும், அவர்களிடம் உள்ள நிலம் தொடர்பான தகவல்களையும், அரசு இணையதளத்தில் பதிவு செய்வதை, பீஹார் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
பீஹாரில் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் தொடர்பான தகவல்களை, பீஹார் மாநில மத அறக்கட்டளை வாரியம் சேகரித்து, தன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இதுகுறித்து, சட்ட அமைச்சர் நிதின் நபின் கூறியுள்ளதாவது:
பீஹார் ஹிந்து சமய அறநிலைய சட்டத்தின்படி, அனைத்து பொதுக்கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், தர்மசாலாக்கள், பீஹார் மாநில மத அறக்கட்டளை வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் இவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் தொடர்பான தகவல்களும் பதிவு செய்ய வேண்டும். இந்த நிலங்கள் முறைகேடாக விற்கப்படுவது, ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படும். அதே நேரத்தில், பல கோவில்கள், அறக்கட்டளைகள் பதிவு செய்யாமல் இயங்கி வருகின்றன.
அது தொடர்பான தகவல்களை தொகுத்து அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, 18 மாவட்ட கலெக்டர்கள் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளனர். சட்டம், வருவாய், நில நிர்வாகத் துறை அதிகாரிகள் இந்தத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.