'ரேவ் பார்ட்டி' வழக்கில் மேலும் ஒருவர் கைது விசாரணைக்கு நடிகை ஹேமாவுக்கு 'சம்மன்'
'ரேவ் பார்ட்டி' வழக்கில் மேலும் ஒருவர் கைது விசாரணைக்கு நடிகை ஹேமாவுக்கு 'சம்மன்'
ADDED : மே 26, 2024 06:41 AM

ஹெப்பகோடி: பெங்களூரு, ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19ம் தேதி இரவு 'ரேவ் பார்ட்டி' நடந்தது.
இதில் பங்கேற்ற தெலுங்கு நடிகையர் ஹேமா, ஆஷி ராய் உட்பட 86 பேர், போதைப் பொருள் உட்கொண்டது தெரிந்தது. இந்த வழக்கை சி.சி.பி., விசாரித்து வருகிறது.
ரேவ் பார்ட்டியின்போது சி.சி.பி., போலீசார் நடத்திய சோதனையில் ஒரு காருக்குள், ஆந்திர வேளாண் அமைச்சர் காகனி கோவர்த்தன ரெட்டியின் பெயரில் பாஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரை ஹைதராபாத்தை சேர்ந்த பூர்ணா ரெட்டி என்பவர், ஓட்டி வந்தது தெரிந்தது. போலீசார் சோதனை நடத்தியபோது, பண்ணை வீட்டில் இருந்து பூர்ணா ரெட்டி தப்பித்துவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு, ஹைதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அமைச்சர் பெயரிலான பாஸ் எப்படி கிடைத்தது என்றும், அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகை ஹேமாவுக்கு, சி.சி.பி., போலீசார், நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர். இதுபோல பண்ணை வீட்டின் உரிமையாளர் கோபால் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.