பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடிக்க எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு
பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடிக்க எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு
ADDED : ஜூலை 21, 2024 03:39 AM
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதையடுத்து, துணை ராணுவ படையைச் சேர்ந்த 500 வீரர்களை, எல்லை பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கர வாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பாகிஸ்தானில் இருந்து முறையாக பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், நம் எல்லைக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தரும் நபர்களையும் கண்டறிந்து, பயங்கரவாத செயல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, எல்லையில் ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் படைகளை கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, துணை ராணுவப் படையைச் சேர்ந்த 500 வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.