ADDED : ஏப் 11, 2024 05:37 AM

பெங்களூரு: தங்களிடம் சொல்லாமல், மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார், பொறுப்பில் இருந்து விலகியதால், கர்நாடக நிர்வாகிகள் கோபம் அடைந்துஉள்ளனர்.
கர்நாடக மாநில அ.தி.மு.க., செயலராக இருந்தவர் எஸ்.டி.குமார். இவர், நேற்று கர்நாடக மாநிலச் செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, தமிழகம் ஓசூரில் அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாநில நிர்வாகிகள், கர்நாடக மாநில அவைத் தலைவர் அன்பரசன் தலைமையில், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.
பின், அவைத்தலைவர் அன்பரசன் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி, கர்நாடக மாநில அ.தி.மு.க., செயல்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது' என கூறப்பட்டுள்ளது. விரைவில் பழனிசாமியை சந்தித்து, ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்காததால், எஸ்.டி.குமார் கோபம் அடைந்தார். இதனால், தன்னை மாநில செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி மார்ச் 21ம் தேதி, பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
'தற்போது எங்களிடம் சொல்லாமல், தன்னிச்சையாக பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். இது சரியல்ல' என்றனர்.

