கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று! சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்
கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று! சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்
ADDED : டிச 14, 2024 07:10 AM

கோட்டயம்: கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் அவ்வப்போது பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது கோட்டயத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அம்மாவட்டத்தில் இருக்கும் கூட்டிக்கல், வழுர் ஆகிய கிராமங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இது குறித்து கோட்டயம் கலெக்டர் ஜான் சாமுவேல் கூறி இருப்பதாவது;
பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ள பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. 1 கிலோ மீட்டர் சுற்றளவில் காணப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளையும் அழிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட, மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு உள்ளார். 10 கி.மீ., தொலைவில் உள்ள அனைத்து பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பன்றி இறைச்சி விற்பனைக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ள இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கும், வழக்கமாக காணப்படும் H1N1 பன்றிக் காய்ச்சலுக்கும் வேறுபாடுகள் உண்டு. இந்த வகையான காய்ச்சல் பன்றிகளை மட்டுமே தாக்கும். மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.