அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கு பிறகு பேரவை தேர்தல் கூட்டணி பற்றி முடிவு பாதயாத்திரையை துவக்கினார் மணீஷ் சிசோடியா
அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கு பிறகு பேரவை தேர்தல் கூட்டணி பற்றி முடிவு பாதயாத்திரையை துவக்கினார் மணீஷ் சிசோடியா
ADDED : ஆக 16, 2024 10:09 PM
ஜன்பாத்:“முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு டில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்,” என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக டில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து பேசும் வகையில் பாதயாத்திரை நடத்த மணீஷ் சிசோடியா திட்டமிட்டார்.
நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று இந்த பாதயாத்திரையை துவக்க திட்டமிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மறுநாள் துவங்கும்படி டில்லி காவல் துறை கேட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று பாதயாத்திரையை மணீஷ் சிசோடியா தொடங்கினார்.
முன்னதாக நேற்று டில்லியில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தல் என்பது வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பெறுவதைத் தடுக்கவே இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்தது. தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு, ஆம் ஆத்மியின் மிகப்பெரிய பங்கு உள்ளது.
டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைப்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு முடிவு செய்யப்படும்.
தேர்தல் வேளையில் தான் கூட்டணி பற்றிய பேச்சுக்கள் விவாதிக்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் சிறைக்குள் இருக்கிறார். அவர் விரைவில் வெளியே வருவார் என்று நான் நம்புகிறேன். இந்தக் கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டு அதற்கு அப்போது பதில் கிடைக்கும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு டில்லியில் சாதகமான சூழல் நிலவுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தியது. அதற்கு எதிராக இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
நான் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றி மட்டும் பேசவில்லை. எதிர்காலத்தில் ராகுல் காந்தி கூட சிறைக்குச் செல்லலாம்.
தங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதும் அரசியல்கட்சிகளின் பணிதான். பணமோசடி தடுப்புச் சட்டத்தை எந்த அளவிற்கு பா.ஜ., தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதும் கட்சிகளின் கடமை.
டில்லி அமைச்சரவையில் மீண்டும் இணைவேனா என்ற கேள்விக்கு முதல்வர் வெளியே வந்ததும் அவர் சொல்வார். அமைச்சர் பதவியை திரும்பப் பெறுவதற்கு நான் அவசரப்படவில்லை. இதுவரை யாரிடமும் இதுகுறித்து எந்த பேச்சும் நடத்தவில்லை.
இந்த நெருக்கடியால் கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் வித்தியாசமான அர்ப்பணிப்பை நான் காண்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சியில் மன உறுதி இன்னும் குறையவில்லை. கட்சி பிளவுபடவில்லை. ஆட்சி கவிழவில்லை என்பது நல்ல விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.