பா.ஜ., - ம.ஜ.த., பாதயாத்திரைக்கு எதிர்ப்பு அஹிந்தா அமைப்பினர் இன்று கண்டன பேரணி
பா.ஜ., - ம.ஜ.த., பாதயாத்திரைக்கு எதிர்ப்பு அஹிந்தா அமைப்பினர் இன்று கண்டன பேரணி
ADDED : ஆக 04, 2024 11:10 PM

தாவணகெரே: ''மூடா முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் எதிர்க்கட்சியினரை கண்டித்து, தாவணகெரேயில் இன்று ஊர்வலம் நடத்தப்படும்,'' என அஹிந்தா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரையடுத்து, விளக்கம் அளிக்கும்படி முதல்வருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
ஆலோசனை கூட்டம்
முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பாதயாத்திரையை துவக்கி உள்ளனர்.
இந்நிலையில், தாவணகெரேயில் நேற்று அஹிந்தா அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், அமைப்பின் தலைவர் சமன் சாப் கூறியதாவது:
மூடா முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களின் செயலை கண்டித்து நாளை (இன்று) அஹிந்தா அமைப்பினர் நகரின் அம்பேத்கர் சதுக்கத்தில் இருந்து சங்கொல்லி ராயண்ணா சதுக்கம் வரை கண்டன ஊர்வலம் நடத்த உள்ளோம். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து சமுதாய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் சித்தராமையா. அவர் ஒருவர் மட்டுமே ஊழல் இல்லாமல் ஆட்சி செய்துள்ளார். மத்திய அரசோ, ஜனநாயகத்தை ஓரம்கட்டி விட்டு, அமலாக்க துறை, வருமான வரித்துறையை ஏவுகிறது.
சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்து ஓராண்டுக்குள், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.
கவர்னருக்கு இடமில்லை
மூடா முறைகேட்டில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கவர்னர் தாவர்சந்த் கெலாட், நோட்டீசை திரும்ப பெற வேண்டும்.
இல்லையெனில், அவர் விலக வேண்டும். சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவருக்கு பெங்களூரில் இடமில்லை.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, அரசியல் அனுபவம் இல்லாதவர். அவரால் தான், அவரின் தந்தை சிறைக்கு சென்றார். சித்தராமையாவை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை.
குமாரசாமியின் குடும்பம் பற்றி மாநிலத்தின் 7 கோடி மக்களுக்கு தெரியும். 80 சதவீத மக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
அவருக்கு பிரச்னை ஏற்பட்டால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம். அரசியல் சாசனத்தில் பா.ஜ.,வினருக்கு நம்பிக்கை இருந்தால், பாதயாத்திரையை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின், ஊடகத்தினருக்கு பேட்டியளித்த அஹிந்தா அமைப்பினர். இடம்: தாவணகெரே.