'முதல்வரானதும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து'
'முதல்வரானதும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து'
ADDED : செப் 15, 2024 11:56 PM

பாட்னா: தேர்தல் வியூக நிபுணராக இருந்து, அரசியல் கட்சி தலைவராகி உள்ள பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் பீஹாரில் அமலில் உள்ள மது விலக்கை ஒரு மணி நேரத்தில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பீஹாரைச் சேர்ந்தவர் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், ஜன சுராஜ் என்ற பெயரில் ஒரு பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறார். இதை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ள அவர், அதற்காக வரும் அக்டோபரில் பிரமாண்ட துவக்க விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் நேற்று அளித்த பேட்டி:
பீஹாரில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதில் எங்கள் கட்சி களம் இறங்கும். பீஹாரில் தற்போது மதுவிலக்கு அமலில் உள்ளது.
மது மீதான தடை முதல்வர் நிதீஷ் குமாரின் போலித்தனத்தை காட்டுகிறது. சட்டவிரோதமாக இங்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாநிலத்திற்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பீஹாரில் என் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்.
கடந்த 30 ஆண்டுகளாக பீஹாரை மாறி மாறி ஆட்சி செய்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் மாநிலத்துக்கு பல கெடுதல்களை செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

