ADDED : மே 13, 2024 06:34 AM

சிக்கமகளூரு: பலாப்பழம் சாப்பிட முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி, யானை உயிரிழந்தது.
மலை பிரதேசமான சிக்கமகளூரில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி யானைகள், கிராமங்களுக்கு வந்து செல்லும். இதேபோன்று சிக்கபல்லாபூர் மாவட்டம், தொட்டமாகரவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சின் கல்துரை அருகே நேற்று முன்தினம் இரவு யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது.
சந்தீப் என்பவர் பலாப்பழம் தோட்டம் வைத்து உள்ளார். பலாப்பழம் பறிக்க தும்பிக்கையை நீட்டி உள்ளது. அப்போது பலாப்பழம் அருகே மின் கம்பி இருப்பதை கவனிக்காததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
நேற்று காலை சந்தீப் தோட்டத்துக்கு வந்தபோது, யானை இறந்து கிடந்ததை பார்த்தார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரி ரமேஷ் பாபு ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், ''பலாப்பழம் பறிக்க முயற்சித்த போது, மின்சார கம்பியில் தும்பிக்கை பட்டு இறந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் தகனம் செய்யப்படும்,'' என்றார்.