கோல்கட்டாவில் மற்றொரு அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவ ஊழியர் கைது
கோல்கட்டாவில் மற்றொரு அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவ ஊழியர் கைது
ADDED : செப் 15, 2024 04:52 PM

கோல்கட்டா: கோல்கட்டா அரசு மருத்துவமனையில் 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டா ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பும், பதற்றமும் அடங்குவதற்குள், அதே கோல்கட்டாவில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு, மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டில், 26 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இரவில் குழந்தையின் அருகே படுத்திருந்த அவரிடம், அங்கு வார்டு பாயாக பணியாற்றி வரும் தனய் பால் (26) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அதனை தன் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
இதனால், அதிர்ந்து போன அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், வார்டு பாய் தனாய் பாலை கைது செய்ததுடன், அவரது செல்போனை பறிமுதல் செய்து, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, கடந்த மாதம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

