ADDED : மார் 30, 2024 11:10 PM

காஜிபூர்: உத்தர பிரதேசத்தின் காஜிபூரை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. நிழல் உலக தாதாவான இவர் மீது, 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துள்ளார்.
பண்டாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்சாரி சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது மகன் ஒமர் அன்சாரியும், காஜிபூர் எம்.பி.,யும், அவரது சகோதரருமான அப்சல் அன்சாரியும் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து, வன்முறை ஏற்படுவதை தவிர்க்க மாநிலம் முழுதும் தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், அவரது மரணம் குறித்து மாஜிஸ்திரேட் கரிமா சிங் விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று முன்தினம் இரவு அவரது உடல், காஜிபூரில் உள்ள அவரது இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இதில் அவரது அண்ணனும், எம்.பி.,யுமான அப்சல் அன்சாரி, மகன் ஒமர் அன்சாரி, எம்.எல்.ஏ.,வும், மருமகனு மான சுஹைப் அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர்.
ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அன்சாரி உடல், அவரது பெற்றோர் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதையொட்டி, அன்சாரியின் வீடு மற்றும் இடுகாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அன்சாரியின் மனைவி அப்சா மீதும், நில அபகரிப்பு உட்பட ஆறு வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக உள்ள அவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 75,000 ரூபாய் பரிசு அளிப்பதாக உ.பி., போலீசார் அறிவித்துள்ளனர். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அப்சா வரவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அவர் வரவில்லை.

