தங்கவயலில் குப்பை கொட்ட எதிர்ப்பு; தலித் அமைப்புகள் 14 கி.மீ., பேரணி
தங்கவயலில் குப்பை கொட்ட எதிர்ப்பு; தலித் அமைப்புகள் 14 கி.மீ., பேரணி
ADDED : செப் 02, 2024 09:18 PM

தங்கவயல்: பெங்களூரு குப்பைகழிவுகளை தங்கவயல் தாலுகாவில் கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை கண்டித்து பேத்தமங்களா - தங்கவயல் வரை தலித் அமைப்பினர் ஒருங்கிணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு குப்பையை, தங்கவயலில் கொட்டுவதற்காக, பேத்தமங்களா அருகே இடம் தேர்வு செய்து வந்தனர். இத்திட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று தலித் கூட்டமைப்பு சார்பில் பேத்தமங்களாவில் இருந்து தங்கவயலுக்கு நடைபயணம் நடத்தினர்.
பாதை மாற்றம்
பேத்தமங்களாவில் துவங்கி காமதேனஹள்ளி, பெத்தபள்ளி, உரிகம் பேட்டை வழியாக ராபர்ட்சன்பேட்டைக்கு ஊர்வலம் நடத்துவதாக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், மாநில நெடுஞ்சாலையாக இருப்பதால், நீங்கள் குறிப்பிட்டுள்ள சாலை வழியாக ஊர்வலம் நடத்த அனுமதியில்லை.
நாகஷெட்டிஹள்ளி கிராமம் வழியாக செல்ல வேண்டும் என்று போலீசார், ரூட்டை மாற்றினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
'இப்பிரச்னையால் போராட்டத்தின் நோக்கம் கெடக்கூடாது என்பதால், வாதம் செய்தவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்' என்று தலித் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.எல்.ரங்கநாதன் தெரிவித்தார்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய ஊர்வலம் பகல் 1:30 மணிக்கு தங்கவயல் மினி விதான் சவுதா வந்தடைந்தது. மொத்தம் 14 கி.மீ., துாரம் முதியவர்கள் தவிர பெண்கள் உட்பட அனைவருமே நடந்தே வந்தனர்.
தர்ணா
கன்னட எழுத்தாளர் கோலார் ராமையா, தங்கவயல் ரங்கநாதன், பிச்சஹள்ளி மஞ்சுநாத், பங்கார்பேட்டை மதிவாணன், அம்பேத்கர் அகாடமி மதிவாணன், அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., தொழிலாளர் சங்க கர்நாடக தலைவர் ராஜசேகர்.
ரக் ஷண வேதிகே அன்பரசன், தலித் ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மினி விதான் சவுதா முன் தலித் கூட்டமைப்பினர் தர்ணா நடத்தினர். தாசில்தார் நாகவேணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதன்பின், 'அரசின் திட்டவட்டமான முடிவு வரும் வரை, பலவிதமான போராட்டங்கள் தொடரும்' என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
பெங்களூரு குப்பை கழிவுகளை தங்கவயலில் கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட கோரி மினி விதான் சவுதா முன் தலித் கூட்டமைப்பினர் தர்ணா நடத்தினர். இடம்: ராபர்ட்சன்பேட்டை.