மேற்குவங்கத்தில் மாயமான வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் உடல் சடலமாக மீட்பு
மேற்குவங்கத்தில் மாயமான வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் உடல் சடலமாக மீட்பு
ADDED : மே 22, 2024 11:49 AM

கோல்கட்டா: மருத்துவ சிகிச்சைக்காக, மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிற்கு வந்த வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் கடந்த மே 14ம் தேதி காணாமல் போனார். 8 நாட்களுக்குப் பிறகு, இன்று (மே 22) கோல்கட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி. அன்வருல் அசீம். இவர் கடந்த 14ம் தேதி வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிற்கு வந்துள்ளார். பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் மாயமானார். இது பற்றி போலீசில் வங்கதேச தூதரகம் புகார் அளித்திருந்தது. இது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்தனர். இன்று அன்வருல் அசீம் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‛‛8 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தோம். ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, இன்று (மே 22) கோல்கட்டாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இது திட்டமிட்ட செய்த கொலை போல் தெரிகிறது'' என தெரிவித்தனர்.

