போக்குவரத்து காவல் நிலையங்களில் இரவு பணியில் மகளிர் போலீசார் நியமனம்
போக்குவரத்து காவல் நிலையங்களில் இரவு பணியில் மகளிர் போலீசார் நியமனம்
ADDED : ஆக 23, 2024 06:13 AM
பெங்களூரு: பெங்களூரில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதால், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில், இரவு ஷிப்ட் பணிகளுக்கு மகளிர் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது:
பெங்களூரில் சில நாட்களுக்கு முன், இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நகரில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளது.
சில நேரங்களில், சில பெண்களும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விதிமுறைகளை மீறுகின்றனர். இவர்கள் குடிபோதையில் உள்ளனரா என்பதை, ஆண் போலீசாரால் சோதனையிட முடியாது.
இதுபோன்ற வேளைகளில், பெண்கள் தகராறு செய்யும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. இவர்களை கட்டுப்படுத்த மகளிர் போலீசார் தேவை.
பாலியல் வன்முறை
இரவு நேரங்களில் பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதாக, புகார் வந்துள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்புக்காக, இரவு ஷிப்டில், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில், தலா இரண்டு மகளிர் தலைமை ஏட்டுகள், ஒரு மகளிர் போலீசை நியமித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரின் 50 போக்குவரத்து போலீஸ் நிலையங்களிலும் மகளிர் போலீசார் இருப்பர்.
இருவர் போலீஸ் நிலையத்திலும், மற்றொருவர் ரோந்து பணியிலும் ஈடுபடுவர். எங்காவது பெண்கள் பிரச்னையில் சிக்கினால், உடனடியாக உதவிக்கு செல்வர்.
4 நாள் மட்டும்
இதற்கு முன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறித்து, இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரி சோதனையிடுவது வழக்கம்.
தற்போது இப்பணியில், எஸ்.ஐ., அளவிளான அதிகாரிகளும் ஈடுபடுவர். வியாழன் முதல் ஞாயிறு வரை வாரத்தில் நான்கு நாட்கள், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே, 'டிரங்க் அண்ட் டிரைவ்' சோதனை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.