ADDED : செப் 18, 2024 04:58 AM

கலபுரகி : ''நாகமங்களா கலவர வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி அளித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியா நாகமங்களாவில் நடந்த கலவரம் தொடர்பாக, அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். விசாரணை சரியான பாதையில் செல்கிறது. கலவரத்தில் வெளியாட்களும், பி.எப்.ஐ., அமைப்பினரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விசாரணை அறிக்கை வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். கலவரம் தொடர்பாக டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
பா.ஜ., கூறுவது போன்று கலவரத்தை, நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அவர்கள் சொல்வதை எல்லாம், எங்களால் கேட்க முடியாது. நடிகர் தர்ஷனுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில், ராஜ உபசாரம் கிடைத்தது பற்றி தெரிந்ததும் 11 போலீசாரை சஸ்பெண்ட் செய்தோம்.
தர்ஷன், அவரது கூட்டாளிகளை வேறு சிறைகளுக்கு மாற்றினோம். பெண்களை அவமதிக்கும் நோக்கில் பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை விரைவாக கைது செய்தோம். இதில் என்ன தவறு உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

