ADDED : செப் 18, 2024 05:19 AM

மாண்டியா ''நாகமங்களாவில் நடந்த கலவரத்தில், வங்கதேசத்தில் இருந்து வந்து கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் தொடர்பு உள்ளது,'' என்று, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
மாண்டியாவின் நாகமங்களாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டதுடன், கடைகள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தில் தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் நாகமங்களா ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நேற்று அளித்த பேட்டி:
வங்கதேசத்தில் இருந்து நமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், கர்நாடகாவிலும் வசிக்கின்றனர்.
நாகமங்களா தாலுகாவில் பல இடங்களில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். நாகமங்களாவில் நடந்த கலவரத்தில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று, எனக்கு சந்தேகம் உள்ளது.
நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, நாகமங்களாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினர் குறித்து உள்துறை அமைச்சர், போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாகமங்களா கலவரத்தை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், ''நாகமங்களா கலவரம் திட்டமிட்ட செயல். பெட்ரோல் குண்டுகள் எங்கிருந்து வந்தன. இந்த வழக்கில் பாரபட்சமின்றி விசாரணை நடக்க வேண்டும் என்றால், என்.ஐ.ஏ., விசாரணை நடத்த வேண்டும்.
''மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பாலஸ்தீன ஆதரவு கொடி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்படுகிறது,'' என்றார்.