வயநாடு நிலச்சரிவு: தேடுதல் பணியை துல்லியமாக தொடர கமிட்டி அமைக்க ராணுவம் முடிவு
வயநாடு நிலச்சரிவு: தேடுதல் பணியை துல்லியமாக தொடர கமிட்டி அமைக்க ராணுவம் முடிவு
UPDATED : ஆக 06, 2024 06:08 AM
ADDED : ஆக 06, 2024 01:22 AM

கல்பேட்டா: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் ஏழாவது நாளாக தேடுதல் பணி நேற்று தொடர்ந்தது.
முண்டக்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அங்கு வசித்தோர் எண்ணிக்கையை பட்டியலிட்டு, அதில் காணாமல் போனவர்களை துல்லியமாக அடையாளம் கண்டு தேட கமிட்டி அமைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில், 221 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேப்பாடி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமப்பகுதிகளில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆறு கர்ப்பிணிகள், 599 குழந்தைகள் உட்பட 2,514 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு அறிக்கையின்படி 221 உடல்களும், 166 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன சிலரை தொடர்பு கொள்ள முடிந்ததை அடுத்து, மாயமானோர் எண்ணிக்கை 206ல் இருந்து 180 ஆக குறைந்துள்ளது.
சூரல்மலை பகுதியில் ஏழாவது நாளாக நேற்று தேடுதல் பணி தொடர்ந்தது. முண்டக்கை பகுதியில் தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் கூறியதாவது: தேடுதல் பணிக்கு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில், மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளாட்சி அமைப்பினர், உள்ளூர்வாசிகள், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இடம்பெறுவர்.
முண்டக்கையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அங்கு வசித்தோர் எண்ணிக்கையை இந்த கமிட்டி பட்டியலிடும். அந்த பட்டியலில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கும்.
ஒரு பகுதியில் தேடுதல் பணி முழுமையாக முடிந்த பின், அடுத்த இடத்துக்கு அந்த குழு நகரும். ராணுவம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி இந்த கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சூரல்மலை பகுதியில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தேடுதல் பணி தொடர்கிறது. மண்ணில் புதையுண்ட பொருட்களை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் பணி நடக்கிறது. மேலும், தமிழக தீயணைப்பு படையைச் சேர்ந்த 49 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் பாகங்கள், ஹாரிசன்ஸ் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
பிரதமரை சந்திப்பேன்
நிலச்சரிவு முதலில் ஏற்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தேன். அரசியல் பேசுவதற்கு இது நேரமல்ல. பாதிப்புகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தர வேண்டும். அதை, மாநில அரசு உறுதி செய்த பின், அந்த தரவுகளுடன் பிரதமரை சந்திப்பேன்.
- சுரேஷ் கோபி
மத்திய இணையமைச்சர், பா.ஜ.,