அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா : அடுத்த முதல்வர் யார் ?
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா : அடுத்த முதல்வர் யார் ?
ADDED : செப் 17, 2024 02:33 AM

புதுடில்லி,டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்கிறார். இதையடுத்து, புதிய முதல்வர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி நடக்கிறது. இங்கு, டில்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் அளித்தது.
கட்சி நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், 'முதல்வர் பதவியை இரு நாட்களில் ராஜினாமா செய்வேன்.
'மக்கள் தன்னை நேர்மையானவன் எனக் கருதி மீண்டும் வெற்றி பெற செய்தால் மட்டுமே, முதல்வராவேன்' என, சபதமிட்டார்.
மேலும், 2025 துவக்கத்தில் டில்லி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வரும் நவம்பரில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, டில்லிக்கும் தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று மாலை 4:30க்கு டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, ராஜினாமா கடிதத்தை அவர் வழங்க உள்ளார்.
இதற்கிடையே, இன்று காலை நடக்கும் கூட்டத்தில், புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
முதல்வர் போட்டியில், அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்டோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
