ADDED : ஏப் 05, 2024 11:13 PM

ஹாவேரி: ''லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது,'' என ஹாவேரி பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழும். லோக்சபா தேர்தலுக்கு பின், காங்கிரஸ் இரண்டாக பிரியும். எனவே சட்டசபை தேர்தல் நடந்தாலும், ஆச்சரியப்பட முடியாது.
இந்தியா, பல பிரதமர்களை கண்டுள்ளது. ஆனால், மோடியை போன்றவர் நமக்கு கிடைக்க மாட்டார். நேர்மை, கடமை உணர்வு, நேரம் தவறாமை, தெய்வ பக்தி நிறைந்தவர். தேசபக்திக்கு மற்றொரு பெயர் மோடி.
நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தால், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதுவார்.
ஆனால் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, பேச்சில் காண்பிக்காமல் செயல் மூலமாகவே, தக்க பதிலடி தருவார்.
இந்தியாவில் பயிர் காப்பீடு திட்டத்துக்கு காரணமாக இருந்தவர் உதாசி. ஹாவேரி மாவட்டத்துக்கு, 480 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு தொகை வந்துள்ளது. திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் பணியை பிரதமர் செய்கிறார். பிரதமர் பதவிக்கு மோடியை தவிர, தகுதியான தலைவர் வேறு யாரும் இல்லை.
மல்லிகார்ஜுன கார்கே பிரதமராக வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். கர்நாடக காங்கிரசார் ராகுல் பிரதமராக வேண்டும் என்கின்றனர்.
இந்தியாவில், 75 ஆண்டுகளுக்கு பின், தற்போது ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, வீடு, வீடாக தண்ணீர் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டனர். இது மத்திய அரசின் சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.

