ஏ.டி.ஜி.பி., மாற்றம்; இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்': மாண்டியா கலவரத்தால் கர்நாடக அரசு அதிரடி
ஏ.டி.ஜி.பி., மாற்றம்; இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்': மாண்டியா கலவரத்தால் கர்நாடக அரசு அதிரடி
ADDED : செப் 14, 2024 03:28 AM

மாண்டியா: மாண்டியாவில் விநாயகர் ஊர்வலத்தில் வெடித்த கலவரத்தை அடுத்து, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்; இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் ஹிந்து அமைப்புகள், பொது மக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
பதரி கொப்பலு என்ற இடத்தில் ஊர்வலம் வந்த போது, அங்கிருந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்களை வீசினர்; அருகில் இருந்த கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசினர்; பைக்குகள், கார்களை தீயிட்டு எரித்தனர்; தடுக்க வந்த போலீசார் மீதும் கற்களை வீசினர். இந்த கலவரத்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
கலவரம் நடந்த நாகமங்களாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது அலட்சியமாக இருந்த நாகமங்களா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாநில உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா நேற்று ஊழியர்கள் நியமனப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உளவுத்துறையின் புதிய கூடுதல் டி.ஜி.பி.,யாக ஹேமந்த் நிம்பால்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மாண்டியா ம.ஜ.த., - எம்.பி.,யும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி, நேற்று கலவரம் நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினார்.
பின், அவர் கூறியதாவது: முறையாக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவது தான் காங்கிரசின் செயலாக உள்ளது. 1990ல் அப்போதைய முதல்வர் வீரேந்திர பாட்டீலை பதவியில் இருந்து இறக்குவதற்காக, ராம்நகர், சென்னப்பட்டணாவில் மத கலவரத்தை ஏற்படுத்தினர்.
அதேபோன்று நாகமங்களாவிலும் கலவரம் ஏற்படுத்தி உள்ளனர். இது ஒரு சிறிய சம்பவம் என்று மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது பெரிய சம்பவம்; திட்டமிட்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.