சாலையில் பணத்தை வீசி அட்ராசிட்டி... சேட்டை ரீல்ஸ் வாலிபர்களுக்கு குவியும் கண்டனம்
சாலையில் பணத்தை வீசி அட்ராசிட்டி... சேட்டை ரீல்ஸ் வாலிபர்களுக்கு குவியும் கண்டனம்
ADDED : ஆக 23, 2024 11:31 AM

ஹைதராபாத்: விளம்பரத்திற்காக பணத்தை சாலையில் வீசி ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
யூடியூபர்
இந்தியாவில் யூடியூபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் சமையல் செய்வது முதல் பைக் ஓட்டுவது வரையில் அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒவ்வொரு வீடியோவுக்கும் பார்வைகளின் அடிப்படையில் யூடியூப் நிறுவனம் பணமும் தருகிறது. அதைப் பெறுவதற்காக, ஏதோ ஒரு கிறுக்குத்தனத்தை செய்தாக வேண்டும் என்ற மனநிலை பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
பணத்தை வீசி
ஐதராபாத்தின் குகட்பள்ளி எனும் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். அங்கு பைக்கில் வந்த வாலிபர்கள் பணத்தை மேலே தூக்கி வீசியுள்ளனர். இதனை பார்த்த வாகன ஓட்டிகள், ஆபத்தை உணராமல் பைக்குகளை ஆங்காங்கே நிறுத்தி விட்டு பணத்தை எடுக்க முண்டியத்தனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியே பரபரப்பாக மாறியது. இதனை அவர்கள் வீடியோவாக எடுத்து தங்களின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
விளம்பரம்
இதேபோல, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல இடங்களில் பணத்தை தூக்கி வீசி, அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவின் இறுதியில், 'நீங்களும் இதுபோன்று செய்ய வேண்டுமா...?, அப்படியென்றால், எனது டெலிகிராம் பக்கத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்,' என்று வர்த்தக ரீதியாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

