விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் லஷ்கர் - இ - தொய்பாவுக்கு தொடர்பு?
விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் லஷ்கர் - இ - தொய்பாவுக்கு தொடர்பு?
ADDED : மே 05, 2024 11:31 PM

பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரில் விமானப் படை வீரர்கள் மீது, நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் - ரஜோரி லோக்சபா தொகுதிக்கு வரும் 25ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தடுப்பதற்கான சோதனையில் பாதுகாப்பு படை வீரர்கள், விமானப் படை வீரர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
தேடுதல் பணி
அதன்படி, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாஷிதர் பகுதியில், விமானப் படை வீரர்கள் நேற்று முன்தினம் இரு வாகனங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். விமானப் படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் விமானப் படை வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் வாயிலாக, உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சிகிச்சை பலனின்றி விக்கி பஹாடே என்ற வீரர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பே காரணம் என, உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூடுதல் பாதுகாப்பு
இது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாக்குதல் நடந்த பகுதியில், முக்கிய பயங்கரவாதியான சஜித் ஜட்டின் குழுவைச் சேர்ந்த 17 பயங்கரவாதிகள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர், விமானப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்திய படைகளின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல், பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவர். தாக்குதல் நடந்த இடத்தில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.