அரசு மருத்துவமனையில் கலாட்டா மருத்துவர்கள் மீது தாக்குல் முயற்சி
அரசு மருத்துவமனையில் கலாட்டா மருத்துவர்கள் மீது தாக்குல் முயற்சி
ADDED : ஆக 22, 2024 06:36 PM
சாஸ்திரி பார்க்:வடகிழக்கு டில்லியில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களை நோயாளியின் கணவர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லியிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வடகிழக்கு டில்லியில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் இரவு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அவரது கணவர் அழைத்து வந்தார்.
புறநோயாளிகள் பிரிவில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் முயன்றனர். அப்போது தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க சில மருத்துவ முறைகளை அவர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதை மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து மருத்துவர்களை அவர் தாக்கியதாகவும், செவிலியர்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை நடத்தி வரும் இஸ்ரார், 56, தன் மனைவியை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். மருத்துவர்களை தாக்கி, செவிலியர்களை அச்சுறுத்துவதை மருத்துவப் பணியாளர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். தங்கள் கடமையை செய்ய விடாமல் அரசுப் பணியாளர்களை தடுத்தது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் ரஜ்னீஷ் கூறுகையில், “அவர் பரிந்துரைத்த சிகிச்சையை மருத்துவர்கள் ஏற்கவில்லை என்பதால் அவர் ஆவேசமடைந்தார். அவர் தவறாக நடந்து கொண்டார். அவரை நாங்கள் சமாதானப்படுத்த முயன்றோம். எங்களால் முடியவில்லை. எங்களில் சிலரை அவர் தாக்கிவிட்டார். மருத்துவர்களை தாக்கும்படி மற்றவர்களையும் துாண்டினார். கோல்கட்டாவில் மருத்துவர் தாக்கப்பட்டால், உங்களுக்கு என்ன கவலை? என தவறாக பேசினார்,” என்றார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.