ADDED : மே 13, 2024 03:18 AM

மூணாறு : கேரளாவின் இடுக்கியில் கோடை மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்தாண்டு கோடை மழை 74 சதவிகிதம் குறைவு என்பதால் விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாவட்டத்தில் முக்கிய சாகுபடியும், பணப்பயிருமான ஏலம் ஏக்கர் கணக்கில் கருகின.
ஏலம் சாகுபடிக்கு சராசரி வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் வரை தேவை. அதை விட கூடுதல் வெப்பம் நிலவியதால் ஏலச்செடிகள் கருகின. அதனால் கட்டப்பனை, குமுளி, ஆனவிலாசம், கம்பம்மெட்டு, பாம்பாடும்பாறை, ராஜகுமாரி, ராஜாக்காடு மற்றும் பகுதிகளைச் சேர்ந்த ஏல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் வறட்சியால் சேதமடைந்த விவசாயத்தை கணக்கிடுவதற்கான வேளாண்துறை வல்லுனர் குழு, வேளாண்துறை அமைச்சர் பிரசாத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இடுக்கியில், 175.54 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம், காபி, மிளகு உள்ளிட்ட வேளாண் பணப்பயிர்கள் சேதமடைந்தன. அதில் மிகவும் கூடுதலாக ஏலம் விவசாயம் பாதிக்கப்பட்டு, 113.54 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் ஏலம் சாகுபடியை கைவிடும் நோக்கத்தில் செடிகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.