என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் அயோத்தி விவகாரம் முழுமையாக இல்லை : தலைமை பூசாரி
என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் அயோத்தி விவகாரம் முழுமையாக இல்லை : தலைமை பூசாரி
UPDATED : ஜூன் 16, 2024 09:16 PM
ADDED : ஜூன் 16, 2024 09:10 PM

அயோத்தி: என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட புத்தகத்தில் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் அயோத்தி விவகாரம் முழுமையாக இல்லை என அயோத்தி கோவில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துஅவர் கூறியிருப்பதாவது: என்சிஇஆர்டி-யின் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் டிச.,6 1992-ல் நடந்த பாபர் மசூதி இருந்த போது நடந்த நிகழ்வுகள் மற்றும் வரலாற்றை குறிப்பிட வில்லை, அதே போல் டிச.,22 1949-ம் ஆண்டு ராம் லல்லா எப்படிதோன்றியது என்பதை என்சிஇஆர்டி குறிப்பிடவில்லை. பாடபுத்தகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வழக்கில் 2019 நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் இருந்து தான் அயோத்தி கதை துவங்குகிறது.
முக்கியமான நிகழ்வுகளை பாட புத்தகத்தில் குறிப்பிடவில்லை என்றால் அயோத்தி இயக்கம் குறித்த குறைந்தபட்ச புரிதலை குழந்தைகளால் பெற முடியாது.500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம் . இதனை அவர்கள் (என்சிஇஆர்டி ) முன்னிலைப்படுத்த வேண்டும். இதையெல்லாம் அவர்கள் கூறவில்லை என்றால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நவம்பர் 9, 2019 இல் இருந்து தொடங்கினால் அது முழுமையடையாது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாடபுத்தகத்தில் குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரத யாத்திரை, கரசேவகர்கள் ஈடுபட்டது, டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத வன்முறை, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது உள்ளிட்டவை முந்தைய பதிப்பில்தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பதிப்பில் பல முக்கியமான விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன எனவும், அயோத்தி குறித்த பகுதி நான்கு பக்கங்களில் இருந்து இரண்டாக சுருக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.