ADDED : ஆக 09, 2024 11:53 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக, இந்தியா - வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், நிலைமையை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையின் ஏ.டி.ஜி.பி., தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வங்கதேசத்தில் நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் வைத்து, எல்லையில் உள்ள நிலைமையை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையின் கிழக்கு பிரிவைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி., தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் தெற்கு வங்க படையின் ஐ.ஜி., திரிபுரா படையின் ஐ.ஜி., லேண்ட் போர்ட் ஆணையத்தின் செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இந்த குழு, அங்கு உள்ள இந்திய குடிமக்கள், ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐ.நா., கண்டனம்
வங்கதேசத்தில் இன அடிப்படையிலான தாக்குதல்கள், வன்முறையை துாண்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக, ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெசின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துஉள்ளார்.