UPDATED : மே 28, 2024 01:14 AM
ADDED : மே 28, 2024 01:12 AM

ராஞ்சி, ஜார்க்கண்டில், மதுபான விடுதியில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், டி.ஜே.,வாக பணிபுரிந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர், ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள, 'எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பார்' என்ற மதுபான விடுதியில், டி.ஜே.,வாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த மதுபான விடுதியில், வாடிக்கையாளர்களுக்கும், விடுதியின் பவுன்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, வாடிக்கையாளர்களில் ஒருவர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே டி.ஜே., சந்தீப் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுபான விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.