சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானம்: எதிர்ப்பை மீறி தொடர முடிவு
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானம்: எதிர்ப்பை மீறி தொடர முடிவு
ADDED : மே 24, 2024 04:02 AM

மூணாறு: மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தொடர அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் பெருகுடா பகுதியில் சிலந்தியாற்றின் குறுக்கே 'ஜலஜீவன் மிஷன்' குடிநீர் திட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆறு அமராவதி அணையின் நீர் ஆதாரமான பாம்பாற்றின் துணை ஆறு என்பதால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து போதிய அளவில் இன்றி திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் சாகுபடியும், 110 குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் என தமிழகத்தில் தி.மு.க., தவிர பிற முக்கிய கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புகளுடன் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனிடையே தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தடுப்பணை கட்ட மத்திய சுற்றுச்சூழல், தேசிய வன உயிரின வாரியம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவற்றிடம் கேரள அரசு முறையாக அனுமதி பெற்றுள்ளதா, இல்லாதபட்சத்தில் தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் வழக்கு விசாரணையை மே 24 க்கு ( இன்று) ஒத்தி வைத்து இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
அதனை அறியாமல் தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தடுப்பணை கட்டுமானத்தை தொடரப் போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அது தொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டவடை ஊராட்சி தலைவர் கணபதியம்மாள், துணைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. வட்டவடை பகுதி இந்திய கம்யூ., செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் குமாரசாமி, காங்., மண்டல தலைவர் சேதுராமன், பா.ஜ., சார்பில் பாண்டியன், ராமர், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசியல் சுய லாபத்திற்காக சிலர் வட்டவடை மக்களின் குடிநீர் திட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். அதனை முறியடிக்கும் வகையில் போராட்டங்களும், தேவைப்பட்டால் 'பந்த்' உட்பட முழு அடைப்பும் நடத்தப்படும். அதேபோல் சட்டப்படி நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுகவும், தடுப்பணை பிரச்னையில் கேரள அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்காததால் கட்டுமானம் தொடரவும் முடிவு செய்தனர்.