பெலகாவி காங்., மாநாடு நுாற்றாண்டு விழா: ஆண்டு முழுதும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு
பெலகாவி காங்., மாநாடு நுாற்றாண்டு விழா: ஆண்டு முழுதும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு
ADDED : செப் 01, 2024 03:27 AM
பெங்களூரு : பெலகாவி காங்கிரஸ் மாநாட்டின் நுாற்றாண்டு நிறைவை ஒட்டி, 2025 அக்டோபர் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அக்கட்சி முடிவு செய்தது.
பெலகாவியில், 1924ல் மகாத்மா காந்தி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடந்து, இந்தாண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.
இதனால், காங்கிரஸ் தரப்பில் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் தலைமையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், முனியப்பா, ராமலிங்கரெட்டி, ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, பெலகாவியில் பிரமாண்டமான காங்கிரஸ் மாநாடு நடத்தவும், 2025 அக்டோபர் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கு, மகாத்மா காந்தியின் கொள்கைகள் அதிக அளவில் தெரியப்படுத்த வேண்டும். இதற்காக, கிராம பஞ்சாயத்துகளிலும் வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
இதற்காக ஆண்டு முழுதும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி கொள்கைகள், காங்கிரஸ் கொள்கைகள் மக்களுக்கு விளக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கூறினார்.