பெமல் நிறுவன மணி விழா கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு நாளை தங்க நாணயம்
பெமல் நிறுவன மணி விழா கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு நாளை தங்க நாணயம்
ADDED : மே 12, 2024 07:09 AM

மைசூரு: பெமல் நிறுவன மணி விழாவை ஒட்டி, அதன் தொழிலாளர்களுக்கு நாளை 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழா தங்கவயல், பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் எளிமையாக கொண்டாடப்பட்டு உள்ளது.
பி.இ.எம்.எல்., எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் 1964ல் தங்கவயலில் கனரக பொதுத் துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. மைசூரு, தங்கவயல், பெங்களூரு ஆகிய நகரங்களில் பெமல் தொழிற்சாலைகள் உள்ளன.
மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு உட்பட்ட இத்தொழிற்சாலைகளில் 3,200 தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு மண்வாரி இயந்திரங்கள், டெட்ரா வாகனம், புல்டோசர்கள், மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது மணிவிழாவை தங்கவயலில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. பெமல் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்காலிக தொழிலாளர்கள் தங்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதனால், நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. தங்கவயலில் விழாவை நடத்தினால் தற்காலிக தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவர் என்ற அச்சத்தில் மணி விழா மைசூரில் நடத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி, மைசூரில் நேற்று காலை விழா நடந்தது. மைசூரு பெமல் நிர்வாக இயக்குனர் ஜி.சீனிவாசன் வரவேற்றார். நிதி துறை இயக்குனர் அனில் ஜேராத், பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி அஜித்குமார் ஸ்ரீ வாஸ்தவ், இன்போசிஸ் பொறியியல் துறை தலைமை அதிகாரி ஸ்ரீகாந்த் குப்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தங்கவயல், பெங்களூரு, மைசூரு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
மணி விழாவை ஒட்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 8 கிராம் தங்க நாணயம், நாளை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மைசூரு, பெங்களூரு பெமல் தொழிற்சாலையில் உள்ள தற்காலிக பணியாளர்கள் விழாவை புறக்கணித்தனர்.
தங்கவயல் இ.எம்., டிவிஷன் நிர்வாக அலுவலகத்தில் எளிய விழா நடத்தி இனிப்புகள் வழங்கினர்.
தங்கவயல், பெங்களூரு பெமல் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்கள் நேற்று மதியம் உணவகத்தில் உணவை சாப்பிட மறுத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பெமல் மணி விழாவில் பங்கேற்ற முன்னாள் நிர்வாக இயக்குனர் வி.ஆர்.எஸ்.நடராஜனுடன் தொழிலாளர்கள். (அடுத்த படம்) தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள தங்க நாணயம். இடம்: மைசூரு.