பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கவயலில் உள்ளிருப்பு போராட்டம்
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கவயலில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 28, 2024 06:04 AM

தங்கவயல் : தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் ஆக்க வலியுறுத்தி, நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
தங்கவயலில் நிரந்தர பணியாளர்கள் 2,250 பேரும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் 2,500 பேரும் உள்ளனர்.
பெமல் தொழிற்சாலையில் 25 -- 30 ஆண்டுகளாக பணியாற்றி, வயது முதிர்ச்சியில் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு எந்த ஒரு சலுகையும் இல்லாமல் வெளியேறுகிற நிலைமையே தொடர்கிறது. பணிக்கொடை உட்பட சலுகைகள் கிடைக்க பணி நிரந்தரம் ஆக்க கோருகின்றனர்.
அண்மையில் நடந்த பெமலின் 60ம் ஆண்டு நிறைவை ஒட்டி, ஒவ்வொரு தொழிலாளருக்கும் நினைவு பரிசாக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்காகவும் போராட்டம் நடத்தினர். பெமல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
பெமல் தொழிற்சாலையில் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 25 -- 30 ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்து வருவோருக்கு பணி நிரந்தரம் கோரி வந்தனர்.
ஆனால், 48 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை கண்டித்து, நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் காலையில், முதல் ஷிப்ட் வேலைக்கு சென்றவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பகல் 2:00 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் வேலைக்கு செல்ல வேண்டியவர்கள், தொழிற்சாலைக்குள் செல்லாமல் வெளியே நின்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெமலில் நேற்றைய உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

