ADDED : மே 20, 2024 05:17 AM

பெங்களூரு : ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி வெற்றி பெற்றதை, இரவு முழுதும் ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
கோல்கட்டா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற நிலையில், நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்சை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
முதலில் ஆடிய எட்டு போட்டிகளில், பெங்களூரு ஏழு ஆட்டங்களில் தோற்று இருந்தது. அதன்பின்னர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பிளே ஆப் சென்று உள்ளதால், பெங்களூரு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு போட்டி முடிந்ததும், ரசிகர்கள் வீட்டிற்கு செல்லாமல், மைதானத்தை சுற்றி வந்து வெற்றியை கொண்டாடினர். பெங்களூரு வீரர்கள் பஸ், ஹோட்டலுக்கு சென்ற போது, ரசிகர்கள் பஸ்சின் முன்பு நின்று ஆட்டம் போட்டனர்.
'ஜெய் ஆர்.சி.பி., இ சாலா கப் நம்தே' என்று உற்சாக கோஷம் எழுப்பினர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திண்டாடினர்.
பெங்களூரு வெற்றியை கொண்டாடும் வகையில், நகர் முழுதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர்.
