ADDED : ஏப் 19, 2024 12:22 AM
புதுடில்லி:ஜாமின் பெறுவதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு சாப்பிடுவது குறித்து விசாரணை நடத்த பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
கலால் கொள்கை வகுக்கப்பட்ட விவகாரத்தில் கைதாகி, திஹார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக, சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் பா.ஜ., பக்கத்தில் டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சத்தேவா கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் எடை, 1 கிலோ அதிகரித்துள்ளது. ஜாமின் பெற வேண்டும் என்ற விரக்தியில் இனிப்புகளை உட்கொண்டு, உடல் எடையை கெஜ்ரிவால் அதிகரித்து வரும் விதம் கவலையளிக்கிறது.
ஜாமின் பெற உங்கள் சர்க்கரை அளவை கெடுத்துவிடுவீர்கள். வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுவீர்கள்.
இது அரசியலுக்கும் மனித நேயத்துக்கும் விரோதமானது.
கலால் கொள்கை வகுப்பதில் திருட்டும், ஊழலும் நடந்துள்ளது என்பது முற்றிலும் உண்மை. சிறையில் வேண்டுமென்றே கெஜ்ரிவால் செய்யும் சதியை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

