அமெரிக்க நிதியுதவி விவகாரத்தில்...பா.ஜ., - காங்கிரஸ் கடும் மோதல்
அமெரிக்க நிதியுதவி விவகாரத்தில்...பா.ஜ., - காங்கிரஸ் கடும் மோதல்
ADDED : பிப் 25, 2025 12:54 AM

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் நிதி தொடர்பான விவகாரத்தில், பா.ஜ., - காங்., தலைவர்களிடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
நம் நாட்டு தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பு வாயிலாக, 2012லிருந்து 182 கோடி ரூபாய் வழங்கி வருவதாகவும், அந்த நிதியை தற்போது நிறுத்தி விட்டதாகவும், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
'இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது. யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க, முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளது' என, டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியது, நம் நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசை மாற்ற வேண்டுமென்பதற்காகவே, இந்த நிதி இந்தியாவுக்குள் வந்ததாகவும், இதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
யார் வாயிலாக, எதற்காக இந்த நிதி வந்தது என்ற கேள்விகள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு ஆங்கில பத்திரிகை, 'அது போன்ற நிதி இந்தியாவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் கூறும் தகவல் உண்மையல்ல' என்று செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவிடமிருந்து பெற்ற நிதி குறித்து, மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், '2023 - -24ம் நிதியாண்டில், அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., இந்திய அரசுடன் இணைந்து, 6,498 கோடி ரூபாய் நிதியுதவிடன் ஏழு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் எதுவும் தேர்தல் அல்லது ஓட்டு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல' என, கூறப்பட்டிருந்தது.
விவசாயம்-, உணவு பாதுகாப்பு, குடிநீர்-, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை, காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை திட்டங்களுக்காக இந்த நிதி பெறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருவதால், தேசிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-- நமது டில்லி நிருபர் -