தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமெரிக்க நிதியுதவி விவகாரத்தில்...பா.ஜ., - காங்கிரஸ் கடும் மோதல்

அமெரிக்க நிதியுதவி விவகாரத்தில்...பா.ஜ., - காங்கிரஸ் கடும் மோதல்

அமெரிக்க நிதியுதவி விவகாரத்தில்...பா.ஜ., - காங்கிரஸ் கடும் மோதல்


ADDED : பிப் 25, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2025 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் நிதி தொடர்பான விவகாரத்தில், பா.ஜ., - காங்., தலைவர்களிடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

நம் நாட்டு தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பு வாயிலாக, 2012லிருந்து 182 கோடி ரூபாய் வழங்கி வருவதாகவும், அந்த நிதியை தற்போது நிறுத்தி விட்டதாகவும், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

'இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது. யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க, முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளது' என, டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியது, நம் நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசை மாற்ற வேண்டுமென்பதற்காகவே, இந்த நிதி இந்தியாவுக்குள் வந்ததாகவும், இதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

யார் வாயிலாக, எதற்காக இந்த நிதி வந்தது என்ற கேள்விகள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு ஆங்கில பத்திரிகை, 'அது போன்ற நிதி இந்தியாவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் கூறும் தகவல் உண்மையல்ல' என்று செய்தி வெளியிட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவிடமிருந்து பெற்ற நிதி குறித்து, மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், '2023 - -24ம் நிதியாண்டில், அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., இந்திய அரசுடன் இணைந்து, 6,498 கோடி ரூபாய் நிதியுதவிடன் ஏழு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் எதுவும் தேர்தல் அல்லது ஓட்டு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல' என, கூறப்பட்டிருந்தது.

விவசாயம்-, உணவு பாதுகாப்பு, குடிநீர்-, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை, காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை திட்டங்களுக்காக இந்த நிதி பெறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருவதால், தேசிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

பொய்கள் அம்பலமாகி விட்டன

மத்திய நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வழங்கிய நிதியின் வாயிலாக ஏழு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஒன்றுகூட இந்திய தேர்தல்களில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட நிதி என்றோ, அது தொடர்புடையது என்றோ கூறப்படவில்லை. எல்லாமே, மத்திய அரசின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தான் என, தெரிந்து விட்டது. இதன் வாயிலாக பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட அவரது சகாக்களின் பொய்களை, மத்திய நிதியமைச்சகம் தன் அறிக்கை வாயிலாக அம்பலப்படுத்தி விட்டது. -ஜெய்ராம் ரமேஷ்,காங்கிரஸ் பொதுச்செயலர்



இறையாண்மை விற்பனைக்கல்ல

இந்த திட்டங்கள் அனைத்துமே அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வுடன் கூடிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவை. இதன் பணிகள் அனைத்துமே வெளிப்படையாக நடைபெறக் கூடியவை. இதை மாற்றிப் பேசுவதன் வாயிலாக, நிதியுதவி என்ற பெயரில் இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சோனியாவுக்கு நெருக்கமான ஜார்ஜ் சோரஸ் போன்ற வெளிநாட்டு நன்கொடையாளர்களையும், அவர்களின் தலையீடுகளையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. இந்தியாவின் இறையாண்மை விற்பனைக்கானது அல்ல. -அமித் மாள்வியா,பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்



-- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us