ADDED : ஏப் 30, 2024 07:43 AM

ஹூப்பள்ளி: ''அரசிலமைப்பை மாற்றும் நோக்கில், பா.ஜ.,வினர் 400 சீட்களை கேட்கின்றனர்,'' என, காங்., மூத்த தலைவர் ரேவண்ணா குற்றம்சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர்கள் 400 சீட்களை கேட்பது, நாட்டின் முன்னேற்றத்துக்காக அல்ல. நாட்டின் அரசியலமைப்பை மாற்றும் நோக்கில் கேட்கின்றனர். பா.ஜ.,வினருக்கு ஜனநாயகம், அரசியலமைப்பு தேவையில்லை.
பா.ஜ.,வினருக்கு கொள்கை இல்லை. வெறும் பிரசாரம் மட்டுமே வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, தமது உரையில் வளர்ச்சி குறித்து பேசுவது இல்லை. காங்கிரசுக்கு எதிராக பேசுகிறார். வாயை திறந்தால் பொய் சொல்கிறார். பணக்காரர்களை, மேலும் பணக்காரர்கள் ஆக்குவது பா.ஜ.,வின் குறிக்கோள்.
உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில், பெண்கள் காணாமல் போவது, பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இவை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை?
வாக்குறுதித் திட்டங்களை, பிரதமர் கிண்டல் செய்கிறார். இப்போது எங்கள் திட்டங்களை 'ஹைஜாக்' செய்து அறிவிக்கிறார். இவர் உலக தலைவராக இருந்தால், ஒரு முறையாவது ஊடகத்தினர் சந்திப்பு நடத்த வேண்டாமா? கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத இவரால், நாட்டின் வளர்ச்சி சாத்தியமா?
இவ்வாறு அவர் கூறினார்.

