பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு
பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு
ADDED : செப் 14, 2024 11:44 PM

பெங்களூரு : ஜாதி பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக, ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது, பெங்களூரு வயாலி காவல் போலீசில் இரண்டு வழக்குகள் பதிவாகின. அவற்றின் அடிப்படையில், கோலார் பண்ணை வீட்டில் இருந்து ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு மாநகராட்சி பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர் சலுவராஜு, 44. இவருக்கு, குப்பை மேலாண்மை ஒப்பந்தம் வழங்குவதற்காக, 30 லட்சம் ரூபாய் கமிஷன் வழங்கும்படி, பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60, கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, முனிரத்னாவுடன் உரையாடிய ஆடியோவை, ஒப்பந்ததாரர் வெளியிட்டார். அதில், 'சொன்னபடி பணத்தை கொண்டு வந்து கொடுத்து விடு. உன் மனைவியை வேறொருவருடன் படுக்க வைக்கிறாய். நீ ஒக்கலிகா தானே, என்னிடம் படுக்க வை' என, பல கெட்ட வார்த்தைகளை முனிரத்னா பேசியுள்ளார்.
மேலும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வேலு நாயக்கரின் ஜாதியை குறிப்பிட்டும் தவறாக முனிரத்னா பேசியுள்ளார்.
இது தொடர்பாக முனிரத்னா மீது, ஒப்பந்ததாரர் சலுவராஜு, வேலு நாயக்கர் ஆகிய இருவரும், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அவற்றின் அடிப்படையில், முனிரத்னா மீது, லஞ்சம் மற்றும் ஜாதியை தவறாக குறிப்பிட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், ஜாதியை தவறாக குறிப்பிட்ட வழக்கில், ஜாமின் வழங்க முடியாத சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, புகார்தாரர்கள் இருவரும், முதல்வர் சித்தராமையாவை நேற்று மாலை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடும்படி, ஆவணங்களுடன் முதல்வரிடம் மனு கொடுத்தனர்.
மேலும், வயாலிகாவலில் உள்ள வீட்டில் தான், ஒப்பந்ததாரரை, எம்.எல்.ஏ., மிரட்டியதாக சொல்லப்பட்டதால், போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முனிரத்னா வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.
அவரது மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தி, எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கோலார் மார்க்கமாக ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து கோலார் போலீசாருக்கு, வயாலிகாவல் போலீசார் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கோலாரின் முல்பாகல் தாலுகா, நங்கிலி கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில் முனிரத்னா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அங்கிருந்து, ஆந்திராவின் சித்துாருக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது, போலீசார் சுற்றி வளைத்து நேற்று மாலை முனிரத்னாவை கைது செய்தனர்.
அவரை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, பெங்களூரு வந்தனர். இதன் பின், வயாலிகாவல் போலீசாரிடம், கோலார் போலீசார் ஒப்படைத்தனர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை கைது செய்துள்ள சம்பவம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கைதை கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் வயாலி காவல் போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜாதி பெயரை குறிப்பிட்டும், பெண்களை அவமானப்படுத்திய முனிரத்னாவை கட்சியில் இருந்து பா.ஜ., நீக்க வேண்டும். அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இத்தகைய தலைவர்கள் இருப்பதால், மாநிலத்தில் விரைவில் ஜாதிகளிடையே சண்டை அதிகமாகும்.
- சுரேஷ்
முன்னாள் எம்.பி., காங்கிரஸ்
முனிரத்னா என்னிடம் 30 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டிருந்தார். 20 லட்சம் ரூபாய் ஏற்கனவே பெற்றுக் கொண்டார். இன்னும் 10 லட்சம் ரூபாய் தரவில்லை என்று என்னை தவறாக திட்டினார். என்னிடம் அவர் பேசிய ஏழு ஆடியோக்கள் உள்ளன.
- சலுவராஜு ஒப்பந்ததாரர்
ஆடியோவில் இருப்பது முனிரத்னாவின் குரல் தான். இட்லி பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தவர், ஆயிரக்கணக்கான கோடிக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? அவரை கைது செய்திருப்பது, சத்தியத்துக்கு கிடைத்த வெற்றி. சத்திய ஹரிசந்திரன் போன்று அவர் பேசுகிறார்.
- வேலு நாயக்கர் முன்னாள் கவுன்சிலர், காங்கிரஸ்