என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி தொடரும் பா.ஜ., திட்டவட்டம்
என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி தொடரும் பா.ஜ., திட்டவட்டம்
ADDED : ஜூலை 09, 2024 08:43 PM

புதுச்சேரி:“புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தொடரும்,” என, பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார்.
பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுச்சேரிக்கு வந்தார். அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் முதன்முறையாக கூட்டணி அமைத்து பா.ஜ., தேர்தலை சந்தித்தது. ஆளும் கட்சியாக இருப்பதால் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.
இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் சிக்னல் கொடுத்துள்ளனர். எனவே, மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை களைய வேண்டும்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., வினர் கடுமையாக தேர்தல் பணிகளை செய்தனர். அதனால்தான் 2 லட்சத்து 89,000 ஓட்டுக்கள் கிடைத்தன. இதுவும் ஒரு சாதனைதான்.
கடந்த முறை ஒன்பது தொகுதிகளில் தான் போட்டியிட்டோம். இந்த முறை, முதல்முறையாக பா.ஜ., வின் சின்னத்தை புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் கொண்டு சென்றுள்ளோம்.
எதிர்கட்சிகளான காங்.,மற்றும் தி.மு.க., பொய் பிரசாரம் மூலம் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம்.
அதன்பிறகு கட்சியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், இன்னும் கூடுதலாகவும், தீவிரமாகவும் பணியாற்றுவோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம்.
முதல்வர், அமைச்சர்கள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்ததாக எனக்கு தெரியவில்லை. கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.
அப்போது, மத்திய அரசு புதுச்சேரிக்கு கூடுதலாக வளர்ச்சி திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். என்.ஆர்.காங்., உடனான கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும்.
கூட்டணியில் இருந்து கொண்டே பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.