ADDED : மார் 22, 2024 01:03 AM
புதுடில்லி:“அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்,” என, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சத்தேவா வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் கைது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழல் புகாரில் சிக்கிய முதல்வர் இறுதியாக கைது செய்யப்பட்டதில் டில்லியின் ஒவ்வொரு குடிமகனும் திருப்தி அடைந்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது, ஊழலுக்கு கிடைத்த தோல்வி. கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும்.
பஞ்சாபில் போதைக்கு எதிராக நாடகம் நடத்திய கெஜ்ரிவால், டில்லியில் ஒவ்வொரு தெருவிலும் மதுக்கடைகள் மற்றும் பார் ரூம்களை திறந்து, இளைஞர்களை அடிமைத்தனத்தின் படுகுழியில் தள்ளினார்.
சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவது என்பது, அரசியலமைப்பு நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்.
தன்னை கைது செய்தபோது, அப்போதைய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் இதையே கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவுடன் அவர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. டில்லியிலும் அதுவே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

