சட்டசபை தேர்தலில் கற்ற பாடம் பா.ஜ., பிரசார திட்டங்கள் மாற்றம்
சட்டசபை தேர்தலில் கற்ற பாடம் பா.ஜ., பிரசார திட்டங்கள் மாற்றம்
ADDED : ஏப் 18, 2024 03:58 AM
இம்முறை லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ள பா.ஜ., சட்டசபை தேர்தலில் செய்த குளறுபடிகளை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், கர்நாடக பா.ஜ., சில விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டது. பசனகவுடா பாட்டீல் எத்னால், ரேணுகாச்சார்யா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும்படி பேசி, கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினர்.
வெறும் ஹிந்துத்வாவை மட்டும் வைத்து, தேர்தலை சந்திப்பதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உடன்பாடில்லை. ஆனால் இவரது ஆலோசனைகள், கருத்துகளுக்கு பா.ஜ., தலைவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை.
பிரசார திட்டங்களும் பலனளிக்கவில்லை. இதன் விளைவாக  தேர்தலில் பலத்த அடி வாங்கியது. ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தது.  இதை உணர்ந்துள்ள பா.ஜ., தலைவர்கள், லோக்சபா தேர்தலில் எச்சரிக்கையாக அடியெடுத்து வைக்கின்றனர். பிரசாரம் செய்யும்போதும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துகின்றனர்.
ஹிந்துத்வா, திப்பு சுல்தான், மதவாதம் உட்பட சர்ச்சைக்கு காரணமாகும் விஷயங்களை பேசுவதில்லை. இத்தகைய அம்சங்கள் சட்டசபை தேர்தலில் பலனளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள், 10 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சியை விவரித்து ஓட்டு கேட்கின்றனர்.
ஹிந்துத்வா அம்சமும் பயன்படுத்தப்படுகிறது. பிரசார திட்டங்களை பா.ஜ., மாற்றியுள்ளது. காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
- நமது நிருபர் -

