ADDED : ஜூலை 08, 2024 06:29 AM

விஜயபுரா: பாய்லர் வெடித்து சிதறியதில், சர்க்கரை ஆலை பலத்த சேதமடைந்தது. டீ குடிக்க சென்றதால் 15 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
விஜயபுரா பபலேஸ்வர் கிருஷ்ணா நகரில், 'நந்தி' என்ற பெயரில் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணிக்காக 15 தொழிலாளர்கள் ஆலைக்கு வந்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஆலையிலிருந்து சிறிது துாரத்தில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையின் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் தொழிற்சாலை சுவர்கள் இடிந்து விழுந்தன. டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக 15 தொழிலாளர்களும் உயிர் தப்பினர்.
கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி, இதே தொழிற்சாலையில் கொதி கலன் வெடித்ததில் ஒரு தொழிலாளி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாய்லர் வெடித்ததில் சேதம் அடைந்த சர்க்கரை ஆலை. இடம்: பபலேஸ்வர், விஜயபுரா.