ADDED : ஜூன் 24, 2024 04:53 AM

ராய்ச்சூர், : காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், பெண்கள் பாதுகாப்பு மையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து, காதலி தற்கொலை செய்து கொண்டார்.
ராய்ச்சூர் டவுன் தேவா காலனியில் வசிப்பவர் வினய் ரெட்டி, 23. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் அனுராதா, 19. இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர். ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய அனுராதா, வினய் ரெட்டி வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரை, வினய் ரெட்டி குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை மிரட்டினர்.
இதையடுத்து வினய் ரெட்டியும், அனுராதாவும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அனுராதா பெற்றோரை வரவழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். ஆனால், அவர் பெற்றோருடன் செல்ல மறுத்தார். இதையடுத்து, மகளிர் பாதுகாப்பு மையத்தில் அனுராதாவை போலீசார் தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு, பாதுகாப்பு மையத்திற்கு சென்ற வினய் ரெட்டி, அனுராதாவை சந்தித்து பேசினார். அப்போது, 'உன்னை திருமணம் செய்ய முடியாது' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனால், மனமுடைந்த அனுராதா பாதுகாப்பு மையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். உயிருக்கு போராடிய அவரை, பாதுகாப்பு மைய ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். விசாரணை நடக்கிறது.