ADDED : ஜூன் 11, 2024 04:28 AM

பெங்களூரு: பலாத்கார வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு காவல் முடிந்த நிலையில், வரும் 24ம் தேதி வரை, ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹாசன் முன்னாள் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர், சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், சமூக வலைதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின்படி, அவர் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஒரு மாதமாக ஜெர்மனியில் இருந்த பின், மே 31ம் தேதி, பெங்களூரு திரும்பிய அவரை, சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. இரண்டு முறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று பசவனகுடியில் உள்ள அவரது தந்தை ரேவண்ணா வீட்டுக்கு, அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள படுக்கை அறையை, அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த தகவல்படி, பிரஜ்வல் முன்னிலையில் வீட்டில் சோதனை செய்யப்பட்டது.
நேற்றுடன் இரண்டாவது முறையாக சிறப்பு புலனாய்வு குழு காவல் முடிந்த நிலையில், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வரும் 24 வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு பிரஜ்வல் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு 5664 என்ற கைதி எண் வழங்கப்பட்டு உள்ளது.
