ADDED : ஏப் 01, 2024 11:45 PM
பெங்களூரு : பணியின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க, ஓட்டுனர்களுக்கு 'பிரீத் அனலைசர்' சோதனை நடத்த கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுனர்கள் சிலர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாக, அதன் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 26ம் தேதி, விபத்து வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, பணியின் போது மது குடிப்பதை தவிர்க்கும் வகையில், புதிய யோசனையை அமல்படுத்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இது தொடர்பாக பணியாளர்கள், பாதுகாப்பு துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிப்போவில் இருந்து பஸ் வெளியே புறப்படுவதற்கு முன் ஓட்டுனரிடம், பிரீத் அனலைசர் கருவி மூலம் கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டும்.
'அவர் மது அருந்தவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவரை பஸ்சை இயக்க அனுமதிக்க வேண்டும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக, பெங்களூரில் போக்குவரத்து போலீசார், இரவு நேரத்தில் மதுபானம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை, பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டறிவர்.
டிப்போக்கள், பணியாளர்கள் தங்கும் இடம், பஸ்கள் இயக்கப்படும் போது, திடீரென பரிசோதகர்கள், ஓட்டுனரிடம் பிரீத் அனலைசர் பரிசோதனை நடத்துவர்.இதன் மூலம் விபத்து தவிர்க்கப்படும் என நம்புகின்றனர்.

